கட்டுரைகள்

  
தொல்காப்பியரும் அறிவியலும்


            முருகேசு பாக்கியநாதன்

அறிமுகம்
இன்று தமிழில் கிடைக்கக்கூடிய மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதே அறிஞர்களின் முடிபாகும்.தொல் - கா - பியம் என்பதே அதன் விரிவாகும்.தொல் என்பது தொன்மை,கா என்பது காட்சி,இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கொள்ள முடியும்.இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும்.தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர்.சங்ககால மரபின் பிரகாரம் எவரும் தமது இயற்பெயரில் தாம் இயற்றிய எந்த ஆக்கத்தினையும் எழுதவில்லை.அவ்வளவிற்கு தமது பெயரினைப் பிதற்றிக்கொள்ளாத சங்கச் சான்றோராகவே வாழ்ந்தனர்.இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும்.தொல்காப்பியமே தற்போதய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால,இயற்கை,செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமல் போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும்.அதில் ஏறத்தாள 280 ற்கு மேற்பட்ட இடங்களிலே என்ப என்றும்,என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்துய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியத்தை இன்றைய தமிமொழியின் வித்து எனலாம்.
தொல்காப்பியத்தின் காலம்.
தொல்காப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக் குறிப்பிட்டுள்ளனர்.சிலர் கிமு 10.000 ஆண்டிற்கு பலகாகத்திற்கு முற்பட்டது என்றும்.இது ஆரம்பத்திலே எழுத்து மொழியால் அல்லாமல் செவிவழியாக அறிஞர்களால் பேணப்பட்டு வந்தது என்பர். இதற்கு போதிய சான்றுகள் காட்டப்பட வில்லை.பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் அவர்கள் தொல்காப்பியர் காலத்தினை கிமு.10,676 என்று குறிப்பிடுகிறார்கள்.பேராசிரியர் மு.இராமலிங்கம் மற்றும் பகீரதன் ஆகியோர் அதனை ஏற்றுள்ளனர்.பா.வே,மாணிக்கநாயகர்,காசு பிள்ளை கிமு 20ம் நூற்றாண்டேன்றும்,நாவலர் சோமசுந்தர பாரதியார் கிமு 10ம் நூற்றாண்டென்றும்,மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கிமு 7ம் நூற்றாண்டென்றும்,பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்.ஆர்.தீட்சிதர் கிமு 5ம் நூற்றாண்டென்றும்,மரைமலை அடிகள் கிமு 3ம் நூற்றாண்டென்றும்,சீனிவாச ஐயங்கார் கிமு 4ம் நூற்றாண்டென்றும்,பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கிபி 4ம் அல்லது 5ம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள்.
தொல்காப்பியத்தின் அகப்,புறச்சான்றுகளை வைத்தே காலத்தினைக்கணிப்பர். இந்த வ்கையில் தேவநேயப் பாவாணர் கூறிய கிமு 7ம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ளமுடியும் என்று பொதுவாக அறிஞர்கள்ளால் ஏற்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தின் சிறப்பு
இன்று உலகில் காணப்படும் இலக்கண நூல்கள் யாவும் சொல்லிற்கும்,எழுத்திற்குமே இலக்கணம் கண்டுள்ளன. ஆனால் தொல்காம்மியம் மட்டுமே சொல்,எழுத்து,மற்றும் பொருள் ஆகிய மூன்றிற்கும் இலக்கணம் கண்டுள்ளது. மேலதிகமாக கூறப்பட்ட பொருள் இலக்கணம் என்பது எமது வாழ்வியல் நடவடிக்கைகளின் இயலாகக் கூறப்பட்டுள்ளது.இது தமிழுக்கு மட்டுமேயுரிய தனிப்பெருமையாகும்.எழுத்திலக்கணத்தினையும்,சொல்லிலக்கணத்தினையும் தெளிவாகக் கற்றறிந்தவன் ஒரு காவியத்தினைப் படைக்கும் போது உலகியல் வாழ்க்கையில் அடங்கும் தமிழ் பண்பாட்டை பேணிக்காக்கும் வகையில் அதனைப் படைப்பதற்கெனவே பொருளதிகாரம் படைக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பிய அமைப்பு
தொல்காப்பியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது  எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என்பதாகும்.மேலும் ஒவ்வுரு அதிகாரங்களும் ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன.எழுத்ததிகாரம் 483 நூற்பாக்களையும்,சொல்லதிகாரம் 456 நூற்பாகளையும்,பொருள்திகாரம் 656 நூற்பாக்களையும் மொத்தமாக 1650 நூற்பாக்கள் என்பர். நாம் இங்கு நோக்கப்போவது பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களின் ஒன்பதாவத் இயலான மரபியலின் ஒரு பகுதியாக உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் என்பதாகும். 
தொல்காப்பியத்தின் அறிவியல் (SCIENCE)
தொல்காப்பியர் காலத்தில் இன்று வழங்கிவரும் அறிவியல் என்பது இருக்கவில்லை என்பதை ஏற்றுக்க்கொண்டு ஆனால் அன்று தொல்காப்பியராலோ, கிரேக்க அறிஞர் அரிஸ்ரோட்டில் அவர்களாலே சிந்திக்கப்பட்ட சிந்தனையின் ஊற்றுக்களே பின்பு சிறிது சிற்தாக மனிதன் சிந்திக்க தொடங்கியவுடன் அறிவியல் அல்லது விஞ்ஞான அறிவாக வளரத்தொடங்கியதெனலாம்.5000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியரின் சிந்தனை யாவருக்கும் ஒரு வியப்பானதாகவேயுள்ளது.
        பொருளதிகாரத்தில் மரபில் கூறப்படும் பல விடையங்கள், விஞ்ஞான ரீதியாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ள பல விடயங்களை அவர் தனது அறிவியல்க் கண்கொண்டு ந்ழுதி எம்மைனெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.விலங்குகளின் உணர்திறனை அழகுறக் கூறுகின்றார்.

உயிர்களது பகுப்பும்,சிறப்பும்,மரபும்.


ஓன்றறி வதுவே உற்றறி வதுவே
 இரண்றி வது அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவ்ற்றொடு மூக்கே
நான்கறி வது அவற்றோடு கண்ணே
ஐந்தறி வது அவற்றொடு செவியே
ஆறறி வது அவற்றோடு மனனே
நேரிதி உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
                                          
                            (தொல்-பொரு / சூத் :-571)


இங்கு உயிர்களின் உணர்திறனும் அதன் பாகுபாடும் கூறவந்த தொல்காப்பியர் ஓரறிவு உயிர் என்பது உடலால் மட்டும் அறிவது என்பதாகும்.ஈரறிவு உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் அறிவதாகும்.மூவறிவு உயிர் என்பது உடம்பு,வாய்,மூக்கு என்பதாகும்.நாலறிவு என்பது உடல்,வாய்,மூக்கு,கண் என்பதால் உணரும் அறிவாகும்.ஐந்தறிவென்பது உடல்,வாய்,மூக்கு,கண் ,செவி போன்றவற்றால் உணரும் அறிவாகும்.ஆறறிவென்பது மேற்குறிப்பிட்ட ஐந்தறிவுடன் சேர்த்து பொருட்களையோ ஒரு காட்சியினையோ அன்றி தனது உயிரினையோ ஒரு கருத்தினையோ பகுத்து அறிந்து கொள்வதே அந்த ஆறாவது அறிவு என்றார்.இதனையே தற்காலத்தே பகுத்தறிவு என்பார்.இது மனித இனத்திற்கே பொருந்தும்.
        இவ்வாறு ஆராயப்படும் பகுத்தறிவானது கீள் வருமாறு வரும் என்று தொல்காப்பிய பொருளதிகார உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். 


# உடம்பினால் வெப்பம்,தட்பம்,வன்மை,மென்மை ஆகியவற்றை    அறிய    முடியும்.
# நவினால் கைப்பு,காழ்ப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,புளிப்பு,மதுரம்  என்பனவ்ற்றினை அறியமுடியும்.
# மூக்கினால் நறுமணம்,தீய மணம் ஆகியவற்றை அறியமுடியும்.
# கண்ணினால் ஒளியும்,வெண்மை,செம்மை,பொன்மை,பசுமை,
கருமை,நெடுமை,குறுமை,பருமை,நேர்மை,வட்டம்,கோணம்,சதுரம்
என்பவற்றை அறியமுடியும்.
# செவியினால் வேறுபட்ட ஒலி ஓசைகளை கேட்டறிய முடியும்
# மனத்தால் அறிவதென்பது பகுத்தறிவாகும்.இது மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தும்.ஒரு செயலை அனுமானித்தல்…உதாரணமாக புகை கண்டவிடத்தில் நெருப்பு இருக்கும் என அறிதல்.ஒரு நூலை வாசிக்கும் போது அதன் பொருளை ஊகித்து அறிந்து கொளல்,சிந்தனையின் செயற்பகாடினால் பகுத்து வகுத்து அறிதல்
என்பதாகும்.என்பதே உரையாசிரியர்களின் விளக்கமாகும்.


புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே    தொல்-பொரு/சூத் 572

புல்,மரம் முதலியன ஓரறிவை உடையன என்றும் இவ்வாறு ஓரறிவுடையன வேறும் உண்டென்றும் அவை கொடி தாமரை யென்றும் இது உடலால் மட்டும் உணர்திறனைப்பெறும் என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

நத்தும்.முரளும் ஈரறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே     தொல்-பொரு/சூத் 573

நத்து என்பது சங்கு,நத்து,அலகு,நொள்ளை என்றும் கொள்வர்.முரள் என்பது சிப்பி,கிளிஞ்சல்,ஏரல் என்றும் கொள்வர்.இவை ஈரறிவு உயிரினம் என்பதாகும்.அதேபோல் மற்றவையும் அடங்கும்.இது உடலாலும்,வாயினாலும் இரண்டு அறிவனையயும் பெறும் என்று உரையாசிரியர் குறிப்பிடுவர்.

சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே      தொல்-பொரு/சூத் 574

கறையானும்,எறும்பும் மூவறிவு உடையதென்றும் இவ்வாறாக 
வேறுவகைகளும் உண்டென்றும் இவை உட்லாலும்,வாயினாலும்,
மூக்கினாலும் அறியும் திறன் பெற்ற உயிர்கள் என்பர். 

நண்டும்,தும்பியும் நான்கறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே      தொல்-பொரு/சூத் 575

நண்டும் தும்பியும் நான்கறிவு உடையன,அதேபோல் இவ்வாறாக 
வேறுவகை உயிரினங்களும் உண்டென்றும் இவை உட்ல்,
வாய்,மூக்கு,கண் ஆகியவற்றால் அறியும் திறன் பெற்றன. உயிர்கள் .

மாவும்,புள்ளும் ஐயறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே      தொல்-பொரு/சூத் 576

நான்கு கால் விலங்குகளும்.பறவைகளும் ஐவகை அறிவினை உடையன.
இவ்வாறு வேற்ம் உண்டு.பாம்பு,மீன்,முதலை,ஆமை போன்றவையாகும்.
இவை உடல்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம் புலன்களால் அறிந்து கொள்ளும் தன்மையனவாம்.
  
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே      தொல்-பொரு/சூத் 577

மக்கள் ஆறறிவு உயிர்களாகும்.என்று குறிப்பிட்டு அதேபோல வேறும் உண்டு என்பதால் அவற்றுள் தேவர்,அசுரர்,இயக்கர் முதலானோர் அடங்கும் என்பர்.மனிதர் உடல்,வாய்,கண்,மூக்கு,செவி மனத்தினால் அறியும் பகுத்தறிவு ஆகிய ஆறறிவு உடையர் என்பர்.


இதனைவிட மேலும் கூறும்போது.....
ஒருசார் விலங்கும் உளவென மொழிப      தொல்-பொரு/சூத் 578

விலங்கின் ஒரு பகுதியின ஆறறிவுடையதென தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.அதாவது கிளி,யானை,குரங்கு ஆகியவற்றினைக் குறிப்பிடுகின்றார்.குரங்கிலிருந்தே மனிதனது பரிணாம வழர்ச்சி உருவானது.1870 ல் உருவாகிய சாள்ஸ் டார்வினின் மனிதனின் பரிணாம வழர்ச்சிக் கோட்பாடு கண்டுபிடிப்பதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பே குரங்கினை மனித உணர்விற்கு சமனான உணர்வு உள்ள பிராணி என்பதனைக் கண்டறிந்த பெருமகன் தொல்காப்பியராகும்.இதனால் அவரை நாங்கள் தத்துவஞானி என்றே அழைக்க முடியும். அது போலவே ஆட்களை அறிந்து வைத்திருத்தல்,பல காலத்திற்கு நினைவில் வைத்திருத்தல்,
சொல்லும் வேலைகளை ஞாபகமாக வைத்திருந்து செய்தல்,மனிதன் அதனை சொல்லாவிடினும் அச்செயலைத்தானாகவே செய்தல் எனும் தொழில் பாடுகளினால் அவற்றையும் சில வேளைகளில் ஆறறிவுடன் உள்ள பிராணிகளாக யானை,கிளி,குரங்கு போன்ற பிராணிகளையும் சேர்க்கிறார்கள்.
         இவ்வாறாக புதிய கோணத்தில் அறிவியல் சிந்தனையோடு நோக்கியதாலேயே இவ்வாறான ஒரு புதிய கருத்தினை முன்வைத்து தொல்காப்பியர் எழுதியது எமது தமிழுக்கு அவர் கொடுத்த பெருமையெனலாம். இவ்வாறு அறிவியல்ரீதியில் மரபியலில் ஆய்ந்தார் தொல்காப்பியர். இவ்வாறு தமிழ் ஒலிப்பிறப்பினை ஆய்ந்து வெளியிட்ட கருத்துக்களும் அறிவியல் ரீதியான சிந்தனைக்குரியன.


தத்துவ மேதை அரிஸ்ரோட்டில் அவர்களின
உயிரியல் பாகுபாடு

           இவர் கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதையாகும். இவரின் குரு தத்துவமேதை சாக்கிரட்டீஸ்
அவார்.இக்காலம் தமிழ் நாட்டில் கடைச்சங்கம் இருந்த காலமாகும்.
இக்காலத்தே கிரேக்கருடன் வணிகத்தொடர்பு தமிழருக்கு இருந்ததென்பது சங்க இலக்கிய நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.தமிழ் அரசர்களின் காவற்கடமைகளில் யவனர்கள் இருந்தார்கள் என்று அதே சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.யனவர்கள் என்போர் கிரெக்கர்களாவர்.
அத்தோடு எமது சங்கக் கவிதைகளின் பாடுபொருட்களும் கிரேக்க இலக்கிய பாடு பொருட்களும் அக்காலத்தே சில பகுதிகளில் கிட்டத்தட்ட
ஒரே வகையாக இருந்ததென பேராசிரியர் க.கைலாசபதி அவர்களும் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளாரும் குறிப்பிடுவது ஈண்டு கவனிக்கத்தக்கது. ஆகவே கல்வியியலிலும் ஏதோவொரு தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு தொல்காப்பியரதும் அரிஸ்ரோட்டிலதும் உயிர்க்கோட்பாடு எமது சிந்தனையினைத் தூண்டுகின்றது, சில தமிழ் அறிஞர்களின் கருத்துப்படி தொல்காப்பியர்ரும்
கிபி நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றே கருதுகின்றனர். அப்படியாக நோக்கின் இருவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொள்ளமுடியும். இருவரும் ஒரேவிதமாக வேறு வேறு கோணத்தில் உயிர்களைப் பற்றிச் சிந்திப்பது கவனிக்கத்தக்கது.

           அரிஸ்ரோட்டில் உயிர் பகுப்பு பற்றி என்ன நோக்கியுள்ளார் என்பதனை இவ்வேளையில் பார்ப்பது பய்னுள்ளதாவிருக்கும்.இவர் முதற் பகுப்பாக இரத்தம் உள்ள உயிர்கள் என்றும் இரத்தம் அற்ற உயிர்கள் என்றும் வகுக்கின்றார்.ஆனால் தற்போதய விஞ்ஞானப் பகுப்பாய்வு மேலும் ஒருபடி மேலே சென்று இதே உயிர்களை முள்ளந்தண்டு உள்ளனவென்றும் முள்ளந்தண்டு இல்லாதனவென்றும் பகுக்கின்றது. இரத்தம் உள்ளன என்று வகுத்ததில் மனிதனும் வேறு பாலூட்டிகளும் முட்டையிடும் பறவைகளும் மீன் இனங்களும் வரும். இரத்தம் இல்லாத உயிர்கள் என்னும் போது பூச்சி புளுக்களும் கடின ஓடுகளையுடைய கடல் வாழ் உயிரினங்களையும் அதாவது சிப்பி,ஒக்டபஸ்,கணவாய் போன்றனவும் அட்ங்கும். அவர் உயிர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் (HIERARCHICAL) அதனை அமைக்கின்றார்.இதனால் இதனை LADER OF LIFE or SCALA NATURAE or GREAT CHAIN OF BEING என்று 
உயிர்களின் ஏணி என்றும் மிகப்பெரிய தொடர் சங்கிலி என்றும் அழைக்கின்றார். இவ்வாறாக புல்லில் இருந்து மனிதன் வரை அதன் முதற்தன்மையிலிருந்து இவர் பாகு படுத்தியுள்ள உயிர்களை 11 தரங்களில் பிரித்துள்ளார்.
            எந்த மிருகங்களுக்கும் ஒரே நேரத்தில் தந்தமும் கொம்பும் ஒன்றாக இருந்ததில்லை. யானைக்கு தந்தம் இருப்பது போல் மாட்டிற்கு கொம்புண்டு ஆனால் குதிரைக்கு இல்லையே இல்லை. அடுத்தது மாட்டிற்கு காலில் குளம்பு போல குதிரைக்கு குளம்பு உண்டு. மாடு இரைமீட்டு அசை போடும் மிருகம் ஆனால் குதிரை அப்படியாக அசைபோட்டு உண்வை உண்பதில்லை. இந்த வகையாலும் உயிர்களை பாகுபடுத்தியுள்ளார். அடுத்ததாக வெப்பச்சூழலிலும் குளிர்ச் சூழலிலும் வாழும் உயிரினங்கள் என்ற வகையிலும் பாகுபடுத்தியுள்ளார்.


அரிஸ்ரோட்டில் அவர்கள் உயிர் வகைகளை பாகுபடுத்தும் போது
 
# SOUL OF AN ORGANISM:- உயிருள்ள வாழும் தனித்தாவரம்

# VEGETATIVE SOUL:- இதனைத் தாவரங்களின் உயிர் என்றும் கூறலாம்.   பதியமுறை ஆன்மா என்று திரு.போ.கனகசபாபதி அவர்கள் வகுக்கிறார். VEGETATIVE என்பதது CAMBRIDGE DICTIONARY கருத்துப்படி மூளை இயக்கமில்லாதது என்பது பொருள். இது தனது இனப்பெருக்கத்திற்கும் வழர்ச்சிக்குமாக செயல் படுகின்றது.

# SENSITIVE SOUL:- இதனை உயிர்திறன் உள்ள உயிர் வகைகளாகப் பிரித்திரித்துள்ளார்கள்.இது சில தாவரங்களுக்கும்(தொட்டால் சிணுங்கி) சில பிராணிகளுக்கும் (மண் புளு) பொருந்தும்.அவைகளைத் தொட்டால் அவை தனது பாதுகாப்பை தேடி உடலை சுருக்கிக் கொள்ளும்.மனிதன் நெருப்பைத் தொட்டால் சுடும் என்ற உணர்வினை உணர்ந்தவன்.இதனை அவன் தனது பகுத்தறிவால் அறிவான்.

# RATIONAL SOUL:- இதனை பகுத்தறிவு உள்ள உயிர்கள் என்ற வகையில் அடக்கியுள்ளார்கள்.இதற்கு மனிதனே உதாரணம்.ஒரு வேலையை தொடங்கும் போது அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்த்து தனக்கு பாதுகாப்பானதாகவும்,பிரயோசனப்படும் வகையில் செய்வது பகுத்தறிவின்பாற்படும்.

# மிருகங்களைVEGETATIVE SOUL மற்றும் SENSITIVE SOUL என்ற இருவகைக்குள்ளும் அடக்குகின்றார். பகுத்தறிவு மூளை இயக்கமல்லாத உணர்வுபூர்வமான உயிர் என்ற வகைக்குள் அடக்குகின்றார்.இது இனப்பெருக்கத்திற்கும்,இடம் பெயர்ந்து திரிவதற்கும் உணர் திறன் உள்ளதுமான வகைக்குள்ளும் சேர்க்கின்றார்.

# மனிதனை RATIONAL SOUL:- , SENSITIVE SOUL , RATIONAL SOUL என்ற மூன்ற வகைக்குள்ளும் அடக்குகின்றார்.விலங்குக்குரிய முதல் இரண்டு
இலக்கணங்களையும் சிறப்பாக பகுத்தறிவினையும் மனிதனுக்குள் சேர்ந்துள்ளதே சிறப்பம்சமாகும்.

            தொல்காப்பியர் அறிவு என்பதனை அரிஸ்ரோட்டில் உயிர் என்கிறார்.அறிவு என்பது அறியும் திறன் என்பதாகும். அது தொடுதல்,கேட்டல்,பார்த்தல்,சுவைத்தல்,சுவாசித்தல்....மனிதனின் சிந்தித்தலினாலும் அதனைப் பகுத்து அதன் சரி பிழைகளை ஆய்ந்தறிவதாலுமே மனிதனுக்கு கிடைக்கும் பகுத்தறிவு என்பதாகும். ஆனால் மூளையைப் பயன் படுத்தாதலாலும் உணர் திறத்தாலும் பகுத்தறிவாலும் மட்டும் உயிர்களாகத் தனித்துப் பிரிக்க முடியாது.ஒரு உடம்பிற்கு ஒரு உயிர் மட்டுமே உண்டு.அதனை எவ்வண்ணம் மனிதனுக்கு  RATIONAL SOUL , SENSITIVE SOUL , RATIONAL SOUL       ஆகிய மூன்று SOUL களும் உண்டு என்று கொள்ள முடியும்.SOUL என்பதனை தமிழில் உயிர் என்றும்,சமஸ்கிரதத்தில் ஆன்மா என்றும் கொள்வர்.
                 எது எவ்வாறெனினும் தொல்காப்பியரது பகுப்புக்களும் அரிஸ்ரோட்டில் அவர்களது பகுப்புக்களும் நவீன விஞ்ஞானத்திற்கு மேலும் ஆய்விற்கு ஒரு வழியைத் திறந்து விட்டுள்ளதென்றே கூற வேண்டும்.தொல்காப்பியரது பகுப்பில் கூடுதலாக உயிரின் பகுப்பைவிட அறிவு பற்றிய விளக்கமே உள்ளதைக் காணலாம்.

உசாதுணை நூல்கள்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்புரணர் உரை
பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை
தொல்காப்பியம் புலியூர் கேசிகன் உரை
WIKIPEDIA A FREE ENCYCLOPEDIA:-SEARCH OF ARISTOTLE
  WIKIPEDIA A FREE ENCYCLOPEDIA:-SEARCH OF CHARLES DARWIN
_______________________________________________________________

MANRAM 2012.04.01.